Sunday, November 29, 2009

கைதிகளின் மிஷனரி

இங்கிலாந்தில் செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் எலிசபெத்பிரை. இவரது தந்தை ஜோசப் கர்னி. இவர் கர்னிஸ் பாங்கின் பங்குதாரர். தாயார் கேதரின் பார்க்லே என்னும் பிரபல வங்கியை நடத்தி வந்த குடும்பத்தை சேர்ந்தவர். எலிசபெத்தின் 12ம் வயதில் அவரது தாயார் கேதரின் மரணமடைந்தார். தாயின் மரணம் எலிசபெத்தை வெகுவாக பாதித்தது. இவரே குடும்பத்தில் மூத்தவர் என்பதால் தனது தங்கைகளையும், தம்பியையும் கவனிக்கும் பொறுப்பு தலையில் விழுந்தது. மிகவும் சிரமப்பட்டு ஆறு வருடங்கள் வாழ்க்கையை தள்ளியபிறகு 18 வயதில் வில்லியம் சேவரி என்ற நற்செய்தியாளர் நடத்திய கூட்டங்களில் எலிசபெத் கலந்து கொண்டார்.
""பசியாயிருந்தேன், எனக்கு போஜனங் கொடுத்தீர்கள்;
தாகமாயிருந்தேன், என் தாகத்தை தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னை சேர்த்துக் கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங் கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னை பார்க்க வந்தீர்கள்,'' என்ற இயேசு கிறிஸ்துவின் நற்செய்திகளை மையமாகக் கொண்டு சேவரியின் பிரசங்கம் அமைந்தது. மேலும் இயேசு கிறிஸ்து மனிதகுலத்தின் பாவங்களையும் அதன் விளைவான மரண தண்டனையையும் தம்மேல் ஏற்றுக் கொண்டு, சிலுவையில் தம் ஜீவனைக் கொடுத்தவர் என்ற செய்தி எலிசபெத்தை மிகவும் கவர்ந்தது. இயேசு கிறிஸ்துவை அவர் தனது இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.
சில மாதங்களுக்குப் பிறகு அவரது சபை சார்பில் நடந்த கூட்டம் ஒன்றில், ""நீ அனேக பார்வையற்றோருக்கு ஒளியாக இருப்பாய்; அனேக ஊமையருக்கு நீ பேச்சாக இருப்பாய்; அனேக முடவருக்கு நீ கால்களாக இருப்பாய்,'' என்று ஒரு தீர்க்கதரிசனம் உரைக்கப் பட்டது. இதைக்கேட்ட எலிசபெத், ""இதை ஆண்டவர் எனக்காகத் தான் உரைத்திருக்கிறார்,'' என்று கூறினார். அதன்பிறகு அவரது செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.
ஏழைகள், வியாதியால் பாதிக்கப்பட்டோர், சிறைக் கைதிகள் ஆகியோர் மீது அவருக்கு மிகுந்த பரிவு ஏற்பட்டது. தனது குடும்பத்தில் சேர்ந்த பழைய ஆடைகள் மட்டுமின்றி அனேகரை சந்தித்து பழைய ஆடைகளை சேகரித்து ஏழைகளுக்கு வினியோகம் செய்துவந்தார். வியாதியஸ்தர்களை சந்தித்து ஆறுதலாக பேசி பைபிளிலிருந்து சில வேத பகுதிகளை வாசித்து அவர்களுக்காக ஜெபித்தார். தனது வீட்டிலேயே ஞாயிறு பள்ளி ஊதியத்தை துவக்கினார். கல்வியறிவற்ற குழந்தைகளுக்கு எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுத்தார். வேத சத்தியங்களைக் கற்றுக் கொடுத்து அவர்களை தேவனுடைய பிள்ளைகளாக மாற்றினார்.
இங்கிலாந்திலுள்ள நியூகேட் சிறைச்சாலையை பார்வையிட்ட அவர் ஒரு சிறிய கட்டடத்தில் கைதிகள் பலர் இருப்பதை பார்த்தார். அவர்கள் சார்ந்த வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கே வராத நிலையில் அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். குளிப்பது, சமைப்பது, தூங்குவது என எல்லாமே ஒரே அறைதான். அவர்கள்மீது பரிவு கொண்ட எலிசபெத் அவர்களுக்கு துணிமணி, சாப்பாடு ஆகியவற்றை கொடுத்ததுடன் சிறையில் பெற்றோர்களுடன் இருந்த சிறுவர்களுக்காக ஒரு பள்ளியை துவங்கினார். அங்கிருந்த பெண்களுக்கு பைபிளில் உள்ள வாசகங்களை கற்றுக் கொடுத்தார். இவரது சிறைப்பணி காரணமாக "சிறைக் கைதிகளின்மிஷனரி' என்ற சிறப்புப் பெயரை பெற்றார்.
இங்கிலாந்தில் உள்ள பல ஆலயங்களிலிருந்து அவரை பிரசங்கிக்கும்படி அழைப்புகள் வந்தன. அவரது பிரசங்கத்தில், திக்கற்ற பிள்ளைகளும், கணவரை இழந்தவர்களும் படுகிற உபத்திரவம் பற்றியும் அவர்களுக்கு ஆறுதல் கூறுவது பற்றியும் வலியுறுத்தி பேசுவார்.
இங்கிலாந்தின் அரசியாக இருந்த விக்டோரியா மகாராணி இவரது நற்பணியை பாராட்டினார். அவர் செய்த பணிக்காக பெரும் நன்கொடையை கொடுத்தார். ஏற்கனவே எலிசபெத் செல்வச் செழிப்புடையவர். ஆனாலும் தன்னிடமுள்ள செல்வத்தை பொருட்படுத்தாமல் இறைப்பணியே முக்கியம் என கருதி இயேசு கிறிஸ்துவுக்குள் பலரை வழிநடத்தினார். 1845ல் அவர் மரணமடைந்தார். ஆண்டுகள் உருண்டோடினாலும் அவர் செய்த சமூகப்பணியும் இறைப்பணியும் இன்றும் இங்கிலாந்து மக்களால் பேசப்படுகிறது.

No comments:

Post a Comment