கடும் வெயில்காலத்தில் மலைப்பிரதேசங்களில் உள்ள கோடைவாச ஸ்தலங்களுக்கு போய் சில நாட்கள் ஓய்வு எடுப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். அங்கே செல்வதால், வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்வதுடன், அழகிய இயற்கை காட்சிகளையும் கண்டு மகிழும் வாய்ப்பும், அதன் காரணமாக நமது கவலைகளையெல்லாம் மறக்கின்ற சூழ்நிலையும் உருவாகும். மலைப்பிரதேசங்களுக்கு பயணம் செல்லும் போது, உயரே செல்லச் செல்ல கடல் மட்டத்திற்கு மேல் நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதை அறிவிக்கும் அறிவிப்பு பலகைகளை காண்கிறோம். உயர உயர போய்க் கொண்டிருக்கிறோம் என்பதைக் காண்பதிலே ஒரு வகை மகிழ்ச்சி ஏற்படுகிறது. நியூசிலாந்து நாட்டில் குவின்ஸ் டவுன் என்ற நகரம் உள்ளது. இது மலை <உச்சியில் <உள்ள நகரமாகும். சுற்றுலா பயணிகள் அங்கே ஒரு வித்தியாசமான அறிவிப்பு பலகையைக் காணலாம்.
""குவின்ஸ்டவுன் உங்களை வரவேற்கிறது. நீங்கள் கவலை மட்டத்தில் இருந்து ஆயிரம் அடி மேலே இருக்கிறீர்கள்'' என்ற இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதாவது, எல்லா மனிதர்களும் கவலைப்படுகிறார்கள். இந்த சுற்றுலா தலத்திற்கு வந்தால் கவலைகளை மறந்து மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் இந்த பலகை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சுற்றுலா தலத்தைவிட்டு கீழே இறங்கியதும் மீண்டும் நமது பணிகளில் ஈடுபடுவோம். கவலைகள் மீண்டும் தொற்றிக்கொள்ளும். கவலையேபடாமல் இருக்க வேண்டு மானால் பைபிள் சொல்வதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
""உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்,'' என்று பைபிள் நமக்கு கற்றுத்தருகிறது. கர்த்தரிடம் கவலைகளை ஒப்படைத்து விட்டால், அதை மறப்பதற்கு எந்த இடத்தையும் தேடி அலைய வேண்டியதில்லை. நமது கவலைகளை அவரே ஏற்றுக் கொள்வார். எங்கிருந்தாலும் நாம் கவலையற்று வாழமுடியும்.
திறமைக்கு பரிசு
ரிப்லி என்பவர் எழுதிய "நம்பினால் நம்புங்கள்' என்ற புத்தகத்தில் ஒரு அருமையான தகவல் இருக்கிறது. அதில் ஒரு இரும்புத் துண்டு பற்றி அவர் எழுதியுள்ளார்.ஒரு சாதாரண இரும்புத்துண்டின் விலை 5 டாலர். அதையே குதிரையின் லாடமாக வடித்ததும் 50 டாலராக விலை உயர்ந்து விடுகிறது. தையல் இயந்திரமாக வடிவமைக்கும் போது அதன் விலை 500 டாலராக கூடி விடுகிறது. விலை உயர்ந்த ஸ்விஸ் வாட்சின் மெல்லிய ஸ்பிரிங்காக மாற்றியதும் அதன் விலை 5000 டாலராக ஏறிவிடுகிறது. ஆக, 5 டாலர் மதிப்புள்ள ஒரு பொருள், அதை பதனிட்டு வேறு பொருளாக மாற்றும்போது விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதுபோல நமக்கும் ஆண்டவர் ஆற்றலைத் தந்துள்ளார். அதை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். ஆண்டவர் பைபிள் மூலமாக நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி வலியுறுத்துகிறார். அதை பின்பற்றி திறமையை நல்ல முறையில் பயன்படுத்தினால் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மையாக அமையும். சாதாரண இரும்புத் துண்டு பொருளாக மாறும்போது அதன் மதிப்பு உயர்வது போல, மனிதர்களும் தங்கள் திறமையை நல்ல முறையில் பயன்படுத்தினால் சமுதாயத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
No comments:
Post a Comment