Sunday, November 29, 2009

புத்திசாலித்தனத்தால் பதவி

ஒரு ராஜாவுக்கு மூன்று பிள்ளைகள். அவர் மகன்களை அழைத்து, ""எனக்கு வயதாகி விட்டது. மூத்தவனுக்கே ராஜ்யம் என்ற விதியை மாற்றி, அறிவுத்திறன் மிக்கவனிடம் இந்த நாட்டை ஒப்படைக்க நானும், மந்திரிகளும் முடிவு செய்துள்ளோம். இதற்காக ஒரு போட்டி வைக்கிறேன். உங்களுக்கென ஒதுக்கப்பட்ட மாளிகைகளில், ஏதேனும் ஒரு பொருளை சற்றும் இடைவெளியில்லாமல் நிரப்பி வைக்க வேண்டும். இதுவே போட்டி,'' என்றார்.

இரண்டு நாள் கழித்து, ராஜா மகன்களின் மாளிகைகளைப் பார்க்க மந்திரிகளுடன் சென்றார்.

முதல் மகன், ""அப்பா! என் மாளிகை முழுவதையும் சற்றும் இடைவெளியின்றி வைக்கோலால் நிரப்பியுள்ளேன்,'' என்றான். அடுத்தவன், ""என் மாளிகையை தங்கக்காசுகளால் நிரப்பியுள்ளேன். செல்வத்தைப் பாதுகாக்கத் தெரிந்த எனக்கே பதவி வேண்டும்,'' என்றான்.

மூன்றாம் மகன் வீட்டுக்குச் சென்றார் மன்னர். அங்கே எதுவுமே நிரப்பப்படவில்லை மன்னர் அவனிடம், ""உன் அண்ணன்மார் இருவரும் அரண்மனையை நிரப்பி த்துள்ளனர். நீ ஓன்றும் செய்யாமல் இருக்கிறாயே,'' என்று கோபமாக கேட்டார்.

""தந்தையே! சற்றுப்பொறுங்கள்,'' என்ற இளைய மகன், ஒரு தீப்பெட்டியை எடுத்து வந்து விளக்கேற்றினான். அரண்மனை முழுவதும் வெளிச்சத்தால் நிரம்பியது.

""இப்போது பார்த்தீர்களா! அரண்மனை வெளிச்சத்தால் நிரம்பி விட்டது. இருண்டு கிடக்கும் மக்களின் வாழ்விலும் இப்படியே ஒளியேற்றுவேன்,'' என்றான். அவனது புத்திசாலித்தனம் அனைவரையும் கவர்ந்தது. அவனுக்கே பதவி தரப்பட்டது. ""நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள்,'' என்கிறது பைபிள். இருண்டு கிடக்கும் மூளையில் புத்திசாலித்தனம் என்ற விளக்கேற்றினால், வெற்றி என்றும் உங்களுடையது தான்!

No comments:

Post a Comment