Tuesday, December 15, 2009

ஆயி நகரின் மீது விழுந்தது.

எரிகோ நகரத்தைப் பிடித்தபின் இஸ்ரயேலரின் பார்வை ஆயி என்னும் நகரின் மீது விழுந்தது.

ஆயி பட்டணத்தையும் கைப்பற்றவேண்டும் என்று யோசுவா திட்டமிட்டார். அதுவும் இஸ்ரயேலர்களுக்குச் சொந்தமாகும் என்று கடவுள் வாக்களித்திருந்தார்.

வழக்கம் போல உளவாளிகள் இருவர் ஆயி பட்டணத்துக்குள் அனுப்பப்பட்டனர். உளவாளிகள் ஆயி நகரத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு யோசுவாவிடம் தாங்கள் பார்த்தவற்றைத் தெரியப்படுத்தினர்.

‘தலைவரே…. ஆயி பட்டணத்தைப் பிடிப்பது கடினமான பணி அல்ல. அதை மிக விரைவாக நாம் கைப்பற்றிவிட முடியும்’ உளவாளிகள் சொன்னார்கள்.

யோசுவா ஆனந்தமடைந்தார். இஸ்ரயேல் மக்களிடையே இருந்த வலிமையானவர்களை எல்லாம் ஒன்று திரட்டி போருக்குத் தயாரானார். மக்கள் ஆயி நகரத்தையும் பிடித்து விடும் நோக்கில் அந்த நகரத்தின் மீது போர் தொடுத்தார்கள்.

ஏமாற்றம் ! ஆயி நகர வீரர்கள் இஸ்ரயேலர்களைத் துரத்தியடித்தனர்.

இஸ்ரயேலர்களால் இதை நம்பவே முடியவில்லை. கடினமான எரிகோ நகரத்தைத் தங்களுக்கு வெற்றி இலக்காக்கிய கடவுள், ஆயி பட்டணத்தை மட்டும் ஏன் ஒப்படைக்கவில்லை என்று தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர்.

யோசுவா மனம் தளர்ந்தவராக கடவுளிடம் முறையிட்டார்.

‘கடவுளே… உமது கட்டளைப்படி தானே போரிட்டோ ம். ஆனாலும் தோல்வி கிடைத்ததே…. ‘ என்று கலங்கி மன்றாடினார்.

கடவுள் யோசுவாவின் வேண்டுதலுக்குப் பதிலளித்தார். ‘ என்னுடைய கட்டளையை ஒரு இஸ்ரயேலன் மீறிவிட்டான். நான் எடுக்கக் கூடாது என்று சொல்லியும் எரிகோ நகரத்திலிருந்து அவன் பொருட்களைத் திருடி வைத்திருக்கிறான். அது தீட்டானது. அது தான் உங்கள் தோல்விக்குக் காரணம்’

கடவுள் சொன்னதைக் கேட்ட யோசுவா மிகவும் கோபமடைந்தார்.

‘மூடர்களே… இன்னும் கடவுளுக்கு எதிராய் நடக்கிறீர்களே. உங்களை எப்படித் தான் திருத்துவது. எரிகோ நகரத்திலிருந்து பொருளை கொள்ளையடித்து வைத்திருக்கும் அந்த பேராசைக்காரன் யார் ?’ என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டார்.

யாரும் பதில் சொல்லவில்லை.

‘அது யார் என்பதைக் கண்டுபிடித்து உடனே அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்’ யோசுவா மக்களிடம் சொன்னார்.

மக்கள் தங்களுக்குள்ளேயே தேடி ஆகார் என்பவன் எரிகோவின் சாபத்தீடான பொருட்களை வைத்திருப்பதைக் கண்டுபிடித்தனர். அவன் யோசுவாவின் முன்னால் கொண்டு நிறுத்தப்பட்டான்.

‘ஆகார்… ஏன் கடவுளின் கட்டளையை மீறினாய் ?’ யோசுவா கோபத்தில் கேட்டார். அவன் ஒன்றும் பேசவில்லை.

‘பார்.. உன்னால் தான் நாம் தோல்வியடைந்தோம். நம் வீரர்கள் பலர் இறந்து விட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் உன்னுடைய பேராசை தான். பேராசைக்காரனுடைய முடிவு அழிவு மட்டுமே’ யோசுவா சொன்னார். ஆகார் தலைகுனிந்து நின்றான்.

‘கல்லால் எறிந்து இவனைக் கொன்றுவிடுங்கள்’ யோசுவா ஆணையிட்டார்.

மக்கள் தங்கள் கைகளில் கிடைத்த கற்களை ஆகாரின் மீது வீசினர். ஆகார் இரத்தவெள்ளத்தில் மிதந்தான். பேராசை பிடித்த அவன் அந்த மண்ணிலேயே சமாதியானான்.

யோசுவா வீரர்களை மீண்டும் ஒன்று சேர்த்தார்.

‘இப்போது நான் புதிய ஒரு அணுகுமுறையை வைத்திருக்கிறேன்… கவனமாய்க் கேளுங்கள்’ யோசுவா சொல்ல மக்கள் கவனமானார்கள்.

‘முப்பதினாயிரம் வீரர்கள் நகருக்கு வெளியே சற்றுத் தொலைவில் மறைந்திருக்கவேண்டும். இந்த முப்பதாயிரம் வீரர்களும் நம்மிடமுள்ளவர்களில் சிறந்தவர்களாக இருக்கவேண்டும். மற்ற மக்கள் ஆயி நகரத்தைப் பிடிப்பதற்குப் போவது போல உள்ளே செல்ல வேண்டும். அப்போது ஆயி நகர வீரர்கள் நமக்கு எதிராய் போரிடுவார்கள். நாம் பயந்து பின் வாங்குவது போல பின்வாங்கி ஓடவேண்டும். அவர்கள் நம்மைத் துரத்திக் கொண்டே வருவார்கள். நாம் ஓடிக் கொண்டே இருக்கவேண்டும்…. இந்த நேரத்தில் நகருக்கு அருகில் ஒளிந்திருக்கும் நம் முதல்தர வீரர்கள் முப்பதினாயிரம் பேரும் நகருக்குள் நுழைந்து நகருக்குத் தீயிடவேண்டும்…’

யோசுவா சொன்ன யோசனையை மக்கள் பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘இது மிகவும் சிறப்பான யோசனை. நமக்கு இதில் வெற்றி நிச்சயம்…’ மக்கள் சொன்னார்கள்.

‘நமக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்லாதீர்கள். கடவுள் நமக்கு வெற்றி தருவார் என்று சொல்லுங்கள்’ யோசுவா திருத்தினார்.

போருக்கான நாளும் வந்தது. யோசுவாவின் திட்டம் கனகட்சிதமாக நிறைவேறியது. முப்பதாயிரம் பேர் ஒளிந்துகொள்ள, மற்றவர்கள் நகருக்குள் நுழைந்தபோது துரத்தப்பட்டனர். உடனே அந்த முப்பதினாயிரம் பேரும் நகருக்குள் நுழைந்து நகரைத் தீயிட்டு அழித்தனர். நகர் எரியும் சத்தத்தைக் கேட்ட ஆயி நகர வீரர்கள் துரத்துவதை விட்டுவிட்டு நகரைக் காப்பாற்றுவதற்காக திரும்பி வந்தார்கள். அதுவரைக்கும் புறமுதுகிட்டு ஓடுவதாய் நடித்துக்கொண்டிருந்த இஸ்ரயேலர்கள் ஆயி வீரர்களைத் துரத்தினார்கள். இருபுறமும் இஸ்ரயேல் வீரர்களால் தாக்கப்பட்ட ஆயி நகர வீரர்கள் போரிட்டு மடிந்தார்கள்.

அவ்வாறு ஆயி நகரமும் இஸ்ரயேலர்களின் வசமாயிற்று



எரிகோவையும், ஆயி நகரத்தையும் இஸ்ரயேலர்கள் கைப்பற்றியதை அறிந்த கிபியோனியர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இஸ்ரயேலர்களிடம் வந்து சமாதானம் செய்து கொண்டனர். எமோரியர்களின் அரசர்கள் ஐந்து பேர் இதைப்பற்றிக் கேள்விப்பட்டனர். கிபியோன் மிகவும் செல்வச் செழிப்பான ஊர். எனவே அதை இஸ்ரயேலர்களிடம் கொடுக்காமல் கைப்பற்றவேண்டும் என்று அந்த ஐந்து அரசர்களும் முடிவெடுத்தார்கள்.

அவர்கள் ஒரு மிகப் பெரிய படையைத் திரட்டிக் கொண்டு போய் கிபியோன் நகரை முற்றுகையிடத் தீர்மானித்தார்கள். செய்தி கிபியோனியர்களின் காதுக்குப் போயிற்று. கிபியோன் மன்னன் யோசுவாவிடம் ஓடிவந்தான்.

‘இஸ்ரயேல் தலைவரே… நீர் தான் எங்களுக்கு உதவ வேண்டும்’

‘என்ன நிகழ்ந்ததென்று சொல்லுங்கள். பதட்டப்படாதீர்கள்’ யோசுவா சொன்னார்.

‘ஐந்து மன்னர்கள் இந்த நாட்டின் மீது படையெடுத்து வருகிறார்கள். நீங்கள் தான் எனக்கு உதவவேண்டும்’ மன்னன் கேட்டான்.

யோசுவா உடனே தன்னுடைய வீரர்களை அழைத்தார்.

‘எல்லோரும் போருக்குத் தயாராகுங்கள். அவர்கள் நம்மைத் தாக்கும் முன் நாம் அவர்களைத் தாக்க வேண்டும். எனவே அவர்கள் தங்கியிருக்கும் கூடாரத்துக்கே சென்று அவர்களைத் தாக்குவோம்’ என்றார்.

பெரிய படை ஒன்று புறப்பட்டு அந்த ஐந்து அரசர்களும் பரிவாரங்களோடு தங்கியிருந்த பகுதிக்குச் சென்றது. அவர்கள் அனைவரும் இரவில் ஓய்வெடுத்துக்க் கொண்டிருக்கையில் இஸ்ரயேலர்கள் தாக்கினார்கள்.

திடீர்த்தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத எதிரி அரசர்களின் படைவீரர்கள் நிலைகுலைந்தார்கள்

யோசுவா வானத்தை அண்ணாந்து பார்த்து ‘ சூரிய சந்திரர்களே நீங்கள் இந்த போர் முடியும் மட்டும் வானத்திலேயே இருக்கவேண்டும். ‘ என்று கடவுளின் பெயரால் கட்டளையிட்டார். என்ன ஆச்சரியம் இரண்டு நாட்களாக சூரியன் மறையவேயில்லை.

இதைக்கண்ட எதிரி மன்னர்கள் பயந்து நடுங்கி கிடைத்த திசைகளில் தப்பியோடினார்கள்.

‘கடவுளே எதிரிகளை ஒழிக்க எங்களுக்கு உதவும்’ யோசுவா வேண்டினார். உடனே வானத்திலிருந்து கல்மழை எதிரிகளின் மேல் பொழிந்தது. எதிரிகள் எல்லோரும் கல்மழைக்குப் பலியானார்கள். ஆச்சரியப்படும் விதமாக இஸ்ரயேலர்களை கல்மழை ஒன்றும் செய்யவில்லை.

இவ்வாறு கடவுள் எமோரியருக்கு எதிரான போரிலும் இஸ்ரயேலருக்கே வெற்றியளித்தார்.

No comments:

Post a Comment