Monday, November 30, 2009

தாயன்புக்கும் மேலான அன்பு

இங்கிலாந்து நாட்டில், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம் தாய் தன் பச்சிளம் குழந்தையுடன் தெற்குவேல்ஸ் மலையில் நடந்து கொண்டிருந்தாள். அப்போது, எதிர்பாராத விதமாக கடும் பனிப்புயல் அடித்தது. குளிர் தாளாமல் அந்தத்தாய் மரணமடைந்தாள். அவளது உடலைத் தேடி மீட்புக்குழுவினர் சென்றனர்.
ஓரிடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்த இடத்தில் கிடந்த தாயின் சடலத்தை படையினர் புரட்டினர். சடலத்துக்கு கீழே சுற்றப்பட்ட ஒரு கோட் மற்றும் துணிக்குள் குழந்தை இருந்தது. குழந்தையை படையினர் மீட்டனர்.
கடும் குளிரால் தான் இறந்தாலும் பரவாயில்லை, தன் குழந்தை பிழைக்க வேண்டும் எனக்கருதிய அந்தத்தாய், தன் கோட்டைக் கழற்றி, குழந்தையின் உடலில் சுற்றியிருந்தாள். அதனால் குழந்தை பிழைத்தது. அந்தக் குழந்தை வேறு யாருமல்ல! 1916ம் ஆண்டில் இங்கிலாந்து பிரதமராக இருந்த டேவிட் லாயிட் ஜார்ஜ் தான்.
"ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ?" என்று பைபிள் சொல்கிறது. தாயன்புக்கு ஈடு இணை இல்லை தான்!
ஆனால், தாயன்புக்கும் மேலானது கர்த்தருடைய அன்பு. இந்த உலகத்தில் ஒரு நல்லவன் காப்பாற்றப்பட வேண்டுமென்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த சிலர் இருக்கலாம். ஆனால், பாவிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக யாராவது உயிர் விடுவார்களா? அத்தகைய தியாகத்தைச் செய்தவர் இயேசுநாதர்.
"நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத்துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில், கிறிஸ்து நமக்கு மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணுகிறார்" என்ற வசனம் அவரது தியாகத்தை நிரூபிக்கிறது.

No comments:

Post a Comment