Monday, November 30, 2009

நம்பிக்கை உங்களைக் காப்பாற்றும்

ஒரு குளத்தில் இரண்டு தவளைகள் வசித்தன. நண்பர்களான, அந்த தவளைகள் வித்தியாசமாக சிந்தனை செய்தபடியே இருந்தன. ஒருநாள் தன் நண்பனிடம் பேசிய இன்னொரு தவளை, "நண்பா! இந்தக்குளத்து வாழ்க்கை போரடித்து விட்டது. நாம் யார் வீட்டுக்குள்ளாவது புகுந்து, மனிதர்களைப் போல் வாழ்ந்து பார்ப்போமே," என்றது. நண்பன் தவளையும் ஒப்புக்கொண்டது. இரண்டும் குளத்தில் இருந்து வெளியேறி ஒரு வீட்டுக்குள் புகுந்து மறைந்து கொண்டன. அந்த வீட்டுத்தலைவி, பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பற்ற வைத்து விட்டு, வீட்டுக்குள் ஏதோ வேலை யாகப் போய்விட்டாள். வெள்ளை நிறத்தில் ஏதோ ஒரு திரவத்தைப் பார்த்த இரண்டு தவளைகளும், அதற்குள் குதித்து விளையாடுவோமே என குதித்து நீந்தின. சற்றுநேரத்தில் சூடு அதிகமாகவே இரண்டும் திணறின. ஒரு தவளை, "நண்பா! பயப்படாதே. கடவுள் இருக்கிறார். நம்மைக் காப்பாற்றுவார்," என்றது.

இன்னொரு தவளையோ பயத்தில் உளறியது, இந்த நிலையில் கடவுளால் கூட நம்மைக் காப்பாற்ற முடியாது என்ற பயத்திலேயே இறந்து விட்டது.

கடவுள் நம்பிக்கையுள்ள தவளை, பால் பொங்கும் சமயத்தில் மேலே எழும்பி வந்து, குதித்து சிறு காயத்துடன் தப்பி விட்டது.

பைபிளில், நம்பிக்கையைப் பற்றிய வசனங்கள் இருக்கின்றன.

* நாம் நடப்பது நம்பிக்கையினால் தான்; பார்வையால் அல்ல.

* உயிரற்ற உடல் செத்ததாயிருப்பது போலவே, நம்பிக்கையற்ற செயலும் செத்ததே.

* மனிதனிடம் அந்தரங்க நம்பிக்கை வைப்பதை விட, கர்த்தரிடம் நம்பிக்கை வைத்திருப்பதே நல்லது. ஆம்...நம்பிக்கையுடன், பயமின்றி வாழ்க்கையை நடத்தினால், ஆண்டவர் நம்முடன் துணை வருவார்.

No comments:

Post a Comment