ஒரு பங்களாவில், அதன் உரிமையாளரும் அவரது பேரக்குழந்தைகளும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்தப் பெரியவரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. "தாத்தா! குழம்பு காரமாக இருக்கிறதா?" என்று கேட்டனர் விபரம் தெரியாத குழந்தைகள்.
தாத்தா அவர்களிடம், "என் அன்பு செல்வங்களே! இந்த உணவு மிகவும் சுவையாக இருக்கிறது. ஒரு காலத்தில் எங்கள் ஓலை வீட்டில் எந்த வசதியும் கிடையாது. உடைந்த தட்டு இருந்தால் கூட அதிலாவது சாப்பிட்டிருக்கலாம். அது கூட இல்லாததால், சிமென்ட் தரையைக் கழுவி அதில் சாப்பாடு போடுவாள் அம்மா. நான் அதைச்சாப்பிடுவேன். ஆனால், இப்போது அவள் இல்லை. அவளது மகனான நான் இவ்வளவு பெரிய பங்களாவில், வெள்ளித்தட்டில் நெய்ச்சாதம் போட்டு, அதையும் இந்த விலை உயர்ந்த மேஜையின் மீது வைத்து சாப்பிடுகிறேன். இந்த வளர்ச்சிக்கு காரணம் யார் என்று எண்ணினேன். என் தாய், தந்தைக்கு செய்யாத கிருபையை கர்த்தர் எனக்கு செய்துள்ளார். என் இளவயது நிலையை நினைத்துப் பார்த்தேன். கண்கள் நன்றியை கண்ணீராக கொட்டுகின்றன," என்றார். அன்பு இதயங்களே! நம் பழைய நிலைமையை எக்காரணம் கொண்டும் மறந்து விடக்கூடாது. அதில் துளியளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும், அது கடவுளால் கிடைப்பது. அந்நேரத்தில் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்கக்கூடாது.
"நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது," என்கிறது பைபிள்.
No comments:
Post a Comment