Monday, November 30, 2009

அனைவரையும் உபசரிப்போம்

பழத்தோட்டம் ஒன்றில் பணிசெய்து வந்த ஒருவரைப் பற்றி, அவ்வூர் மக்கள் அறிந்து கொள்ள முயன்றனர். அவரது பெயர், ஊர், தேசம் எதுவுமே கண்டுபிடிக்க முடியவில்லை. யாராவது அவரைப் பற்றி விசாரிக்க வந்தால், அவர் தோட்டத்தில் இருக்க மாட்டார். எங்காவது மறைந்து கொள்வார். ஒருநாள், ஒரு சிறுவன் அவர் பணிசெய்த தோட்டத்துக்குள் வேலி தாண்டி புகுந்தான்.

அங்கிருந்த ஆப்பிள் மரங்களில் இருந்த சில பழங்களைப் பறித்து கால் சட்டைப் பையில் திணித்தான். அப்போது, தோட்டத்தில் பணி செய்தவர் அங்கு வந்துவிட்டார். பையனை எட்டிப் பிடித்தார். உடன் வந்த சிறுவர்கள் சிலர் வெளியே நின்றனர். அவர்கள், தங்கள் நண்பன், அவரிடம் உதைபட போவது உறுதி என்று பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர் அவனிடம், ""தம்பி! எதற்காக இப்படி திருட்டுத்தனமாக உள்ளே புக வேண்டும். உனக்கு பழங்கள் வேண்டுமானால் என்னிடம் கேட்டிருக்கலாமே! இந்தா! இன்னும் பழங்கள் தருகிறேன்,'' என்று சொல்லி, ஒரு பை நிறைய பழம் பறித்துக் கொடுத்தார். பயத்துடன் நின்ற அவன், கண்ணீர் வடித்து மன்னிப்பு கேட்டான். அவர் அவனைத் தேற்றி, ""வெளியே நிற்கும் உன் நண்பர்களுக்கும் இதைக் கொடு. <உங்களுக்கு பழம் வேண்டுமானால், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அனைவருமே உ<ள்ளே வரலாம். எல்லோருக்கும் பழம் தருவேன்,'' என்று உறுதிமொழியும் கொடுத்தார். சிறுவனுக்கு ஒரே சந்தோஷம். வெளியில் நின்றவர்களும் மகிழ்ந்தனர்.

மறுநாள் முதல் அவர்கள் தோட்டத்துக்கு மகிழ்ச்சியுடன் வர ஆரம்பித்தார்கள். அவர்களை மரத்தடியில் அமரச்செய்து பழங்கள் தந்ததுடன், இயேசுவின் போதனைகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார் அந்த தோட்டக்காரர். இது அவ்வூர் பெரிய மனிதர்களுக்கு தெரிய வந்தது. அவர் வாழ்ந்த நாடு நாத்திகத்தில் நாட்டமுடையது. தங்கள் தேசத்தில் இப்படி ஒரு ஆன்மிக பிரசாரம் நடப்பதை அரசுக்கு அறிவித்தனர்.

அரசாங்கம் தோட்டக்காரரைக் கைது செய்ய காவலர்களை அனுப்பியது. அவரைக் கைது செய்து சிறையிலும் அடைத்தனர். ஆனால், தோட்டக்காரர் சிறையிலிருந்தும் மறைந்து விட்டார். அதன்பிறகு அவரைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அவர் தேவதூதனாக விண்ணில் இருந்து அனுப்பப்பட்டவர் என்ற விபரம்...பாவம், அவர்களுக்கு எப்படி தெரியும்?

""அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள். அதனாலே சிலர் அறியாமல் தேவதூதரையும்உபசரித்ததுண்டு,'' என்கிறது பைபிள். அந்த தேவதூதரை தண்டிக்காமல் உபசரித்திருந்தால், அந்த நாடு பல பலன்களைப் பெற்றிருக்கும். அதை இழந்தது அவர்களின் கடவுள் நம்பிக்கையின்மையால் தான்! எனவே எல்லோரையும் தேவதூதர்களாகக் கருதி உபசரிக்க பழக வேண்டும்.

No comments:

Post a Comment